உருது மொழியை கட்டாயப் பாடமாக்க சட்டம்: மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உருது மொழியை கட்டாயப் பாடமாக்க சட்டம் கொண்டு வரப்படும் என
உருது மொழியை கட்டாயப் பாடமாக்க சட்டம்: மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உருது மொழியை கட்டாயப் பாடமாக்க சட்டம் கொண்டு வரப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 வேலூர் மாவட்டத்தில் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணமாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வந்தார். திருப்பத்தூர் ஜின்னா சாலையில் காலை 9 மணியளவில் அவர் நடை பயணமாகச் சென்று கடை வீதி, பெரிய கடை வீதி, பேருந்து நிலையம் வழியாக தூய நெஞ்சக் கல்லூரி வரை பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
 இதையடுத்து ஜோலார்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினரைச் சந்தித்து மனுக்களை பெற்று அவர் பேசியது:
 பெண்கள் சுயமாகவும், யாருடைய தயவும், அச்சுறுதலுமின்றி தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற பெரியார் கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க திமுக ஆட்சியின்போது கருணாநிதி மகளிர் சுயஉதவிக் குழுக்களை முதல்முதலில் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கினார். இன்று அந்தக்குழுக்கள் நாடு முழுவதும் விரிவடைந்து உள்ளன. ஆனால் மகளிர் குழுக்கள் அதிமுக ஆட்சியில் நலிவடைந்துள்ளன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் குழுவினரின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
 வாணியம்பாடியில்... வாணியம்பாடியில் தனியார் மண்டபத்தில் தன்ஜும்-எ ஜமாத், அஹலே சுன்னத்-வல் ஜமாத் சேர்ந்த 58 முத்தவல்லிகள், முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார்.
 அப்போது ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி ஆட்சியின்போது தான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 சதவீதமாக உயர்த்தித் தரப்படும். உருது மொழியைக் கட்டாய பாடமாக மாற்றும் சட்டம் கொண்டு வருவது குறித்த வாக்குறுதி திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றார். முன்னதாக வாணியம்பாடி செட்டியப்பனூர் ஈத்கா மைதானத்தில் காளை விடும் (மஞ்சு விரட்டு) நடத்தும் விவசாயிகளையும், அவர்கள் கொண்டு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட காளைகளை ஸ்டாலின் பார்த்தார்.
 பின்னர் வேலூர் மாவட்டம் எருதுவிடும் வீரவிளையாட்டு பாதுகாப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற உத்தரவால் தற்போது தடைச் செய்யப்பட்டுள்ள வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்ட விழாக்களை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரிடம் மனுக்களை அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com