ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினருடன் தொடர்பில் இருந்த காரைக்கால் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால் வள்ளலார் நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் (35) என்பவரை சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத் துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இவ்வழக்கு விவரம்: கடந்த 2000-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற சிராஜ் தவ்லத் மரைக்காயர் பின்னர் ஊர் திரும்பினார். தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தமிழகத்தில் ஏ.வி.எஸ். என்கிற விபசார தடுப்புப் பிரிவினருக்கு, வழக்குத் தொடர்பாக செல்லிடப்பேசி உரையாடலை பதிவு செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது.
இதையடுத்து, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். பல்வேறு வழக்குகளில் தமிழக போலீஸார் இவரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கு சிலருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மாசாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
மத்திய உளவுத் துறையினர் இஸ்மா சாதிக்கை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவருடன் தவ்லத் மரைக்காயருக்கு இருந்த தொடர்பு தெரியவந்து காரைக்காலில் இவர் பிடிபட்டார். நெடுங்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போது உளவுத் துறையினர், போலீஸாரிடம் இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
இவரிடமிருந்து 3 செல்லிடப்பேசி, 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் காவல்நிலைய போலீஸார், இவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணையை தொடர போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.