
தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், "தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி' என்ற தலைப்பில் பங்கேற்கும் கலந்துரையாடல் இன்று முதல் 7 நாட்கள் 7 நகரங்களில் உரையாற்றுகிறார்.
"தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி' என்ற தலைப்பில் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு, 7 நகரங்களில், கல்வி, சுகாதாரம், ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு, விவசாயம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகிய 7 தலைப்புகளில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுகிறார்.
இதில், முதல் நிகழ்ச்சியாக "சுகாதாரம் குறித்து அன்புமணி' என்ற தலைப்பில் தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து வேலூர் ஊரீசு கல்லூரி காப் அரங்கத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுகிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை சேலத்தில் ‘மது ஒழிப்பு குறித்தும், 12-ஆம் தேதி கோவையில் ‘தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றுகிறார். 13-ஆம் தேதி திருச்சி திருவானைக்காவலில் ‘வேளாண் புரட்சி குறித்தும், 14-ஆம் தேதி மதுரையில் ‘ஊழல் ஒழிப்பு குறித்தும், 15-ஆம் தேதி நெல்லையில் ‘தரமான கல்வி குறித்தும் உரையாற்றுகிறார். நிறைவாக 16-ஆம் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில் ‘சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இதில், பொதுமக்கள் பங்கேற்று திட்டங்கள் ஆலோசனைகளை வழங்கவும், சுகாதாரம் குறித்து கேள்விகளை எழுப்பவும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.