பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
வைகோ (மதிமுக): விஜயகாந்தின் முடிவை வரவேற்கிறேன். கூட்டணிக்காக விஜயகாந்த் பேரம் பேசுவதாக அவர் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதனை அவர் தகர்த்துள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): திமுக - அதிமுகவைத் எதிர்த்து தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியுள்ள விஜயகாந்தின் முடிவை வரவேற்கிறோம்.
தமிழிசை (பாஜக): பாஜக கூட்டணிக்கு தேமுதிக வராதது வருத்தமளிக்கவே செய்கிறது. திமுகவோடு தேமுதிக கூட்டணியில் சேராதது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. "பழம் நழுவி பாலில் விழுகிறது' என்று கூறியவர்கள் இதற்கு விளக்கம் தர வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜகவின் பலத்தை நிரூபிப்போம்.
ஜி.கே.வாசன் (தமாகா): தனது கட்சி, மக்கள் நலன் சார்ந்து விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார். அந்த முடிவு வரவேற்கத்தக்கது.
திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): தனக்கு எதிரான அவதூறுகளை தவிடு பொடியாக்கியுள்ளார் விஜயகாந்த். அவரது முடிவு வரவேற்கத்தக்கது. இந்த முடிவால் திமுகவும், பாஜகவும் அதிர்ச்சியடையும். இதனால் மக்கள் நலக்கூட்டணிக்குப் பாதிப்பில்லை.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால், மக்கள் நலக் கூட்டணிக்கு பின்னடைவு இல்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்.
சி.ஆர்.சரஸ்வதி (அதிமுக): தேமுதிக முடிவு குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக தேமுதிக இல்லை.