திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் (எஸ்எஸ்ஐ), முதல்நிலைக் காவலருக்கும் இடையே வியாழக்கிழமை ஏற்பட்ட வாழைப்பழ தகராறில் இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர்.
இதில், காவலரின் காதை சிறப்பு உதவி ஆய்வாளர் கடித்து துப்பினார்.
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் ராதா (52). இங்கு ஓட்டுநராக பணியாற்றுபவர் முதல்நிலைக் காவலர் சரவணன் (45).
இவர்கள் இருவரும் வியாழக்கிழமை காலை திருவானைக்காவல் கொள்ளிடம் வாகனச் சோதனைச் சாவடி அருகே ரோந்து வாகனத்தில் சென்றபோது, சரவணன் வாங்கி வைத்திருந்த வாழைப் பழத்தை ராதா எடுத்து வேறு காவலரிடம் தந்துவிட்டாராம்.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், ராதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.
அப்போது, சிறப்பு உதவி ஆய்வாளர் ராதா, காவலர் சரவணனின் காதை கடித்தாராம். பதிலுக்கு சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாவின் கன்னத்தில் பேனாவால் பலமுறை குத்தினாராம்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பட்டப்பகலில் போலீஸார் அடித்துக் கொண்டதை பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்தனர்.