இலங்கைத் தமிழர்களுக்காகத் தொண்டாற்றிய அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ (மதிமுக): இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவருமான மறைந்த அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி லண்டனில் மறைந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொல்.திருமாவளவன்: இலங்கையில் தமிழர்களுக்காக தொண்டாற்றிய அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி லண்டனில் மறைந்தார் என்கிற செய்தி வேதனையளிக்கிறது. அவரது இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
இலங்கை அரசுக்கு எதிராக போராடி ஆறுமாத காலம் சிறை சென்றவர். இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்ற அவர், தனது இசை அறிவையும் திறனையும் தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்தரும் வகையில் பங்களித்தவர்.
மங்கையர்க்கரசி அம்மையாரை இழந்து நிற்கும் அவரது மகன்கள் பகீரதன், காண்டீபன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.