சென்னை: தமிழகத்தில் கோயில்களுக்கு செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
திருச்சி அக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில், கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை 2015 நவம்பரில் விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவில், கோயிலுக்கு வரும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் அனைவரும் வேட்டி - சட்டை, சேலை, தாவணி போன்ற பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு முழுமையாக மூடிய ஆடையை அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற நவீன ஆடைகளை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் போலீஸார் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அனைத்து கோயில்களிலும் ஜனவரி 1 முதல் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை செயலர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு:
தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த வழக்கில், இந்து கோயில்களுக்குச் செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரப்படவில்லை. எனவே, வழக்கில் தொடர்பில்லாத பிரச்னைக்கு உத்தரவு பிறப்பிப்பதை ஏற்க இயலாது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்றனர்.