ஏழை மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மேலகுழுமணி கிராமத்தைச் சேர்ந்த முத்துவீரன்- மலர்க்கொடி தம்பதியின் மகள் பிருந்தா தேவி. பிளஸ் 2 முடித்த இவருக்கு, கலந்தாய்வில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், உடல் நலம் சரியில்லாத தந்தை உள்ளதால் தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வருவதாகவும், மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டியும் அதிமுக பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஏழ்மை காரணமாக, அவரது உயர்கல்வி பெறும் நல்வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதை அறிந்த ஜெயலலிதா, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். இதன்படி, பிருந்தாதேவியின் முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.50 ஆயிரத்தை "புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்டில்' இருந்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அதிமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.