சட்டப்பேரவையில் உரிய இருக்கை வசதி செய்து கொடுத்தால், கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகச் சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜூன் 16) கூட உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்களின் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:-
கேள்வி: கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?
பதில்: திமுக எம்எல்ஏக்களில் 48 பேர் புதியவர்கள். சட்டப்பேரவை நெறிமுறைகள் தொடர்பாகவும், மரபுகள் தொடர்பாகவும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
கே.: இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்காதது ஏன்?
பதில்: உடல் நலம் காரணமாக இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்கவில்லை.
கே.: சட்டப்பேரவைக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பாரா?
பதில்: பேரவையில் உரிய இருக்கை வசதி செய்து கொடுத்தால், கருணாநிதி கூட்டத்தில் பங்கேற்பார்.
கே.: பேரவையில் திமுகவின் செயல்பாடு எப்படி இருக்கும்?
பதில்: பேரவையில் தெரியும் என்றார் அவர்.