கட்டாய தலைக்கவசம் அணியும்உத்தரவை கடுமையாக செயல்படுத்தாதது ஏன்?தலைமை நீதிபதி கேள்வி

கட்டாய தலைக்கவசம் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் கேள்வி எழுப்பினார்.

கட்டாய தலைக்கவசம் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கம் போல் புதன்கிழமை வழக்குகளை விசாரணை நடத்தத் தொடங்கினர்.

அப்போது, ஒரு வழக்குத் தொடர்பான விசாரணையின் இடையே கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியனிடம் நீதிபதிகள் ஒரு சில கருத்துகளைத் தெரிவித்தனர்.

கடந்தாண்டு இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நான் சென்னை கடற்கரை சாலையில் பல முறை காரில் செல்லும் போது பார்த்து இருக்கிறேன். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல்தான் செல்கின்றனர். இரு சக்கர வாகனம் ஒன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை தலைக்கவசம் அணியாமல் அழைத்துச் செல்கின்றனர்.

ஏன் இது போன்ற நிலை? பல விதிமீறல்களை நான் கவனித்து இருக்கிறேன். நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிவதைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது தலைக்கவசம் அணியாமல் செல்வோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாமல் அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதாக தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com