ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ராமேசுவரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 600-க்கும் அதிகமான விசைப் படகுகளில் ஜூன் 20-ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் மீது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
மேலும், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தியதோடு, மீன் பிடிப்பதற்காக விரித்த வலையையும் அறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் இலங்கை கடற்படையின் தொடர் அராஜகச் செயலை வெளிப்படுத்துகிறது. இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடித் தொழில் தொடர்ந்து பாதிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.