

சென்னை ஐஐடி மாணவர்களின் பாதுகாப்பை போலீஸார் உறுதி செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு இறைச்சிக்காக பசுக்கள், ஒட்டகங்களை விற்கத் தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஐஐடி மாணவர்களான அர்ஜூன் ஜெயகுமார், சாமிநாதன் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை போலீஸார் மேற்கொள்ளாமல், ஐஐடி நிர்வாகம் கூறுவதின் அடிப்படையிலேயே விசாரணையை நடத்துகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஏற்கெனவே இதுபோன்ற பல சம்பங்களில் தொடர்புடையவர். இருந்தபோதும், அவரிடம் போலீஸார் முறையான விசாரணையை நடத்தவில்லை.
எனவே, சென்னை ஐஐடிக்கு உட்பட்ட காவல் வட்ட அதிகாரிகள் அல்லாமல், வேறு காவல் வட்ட அதிகாரிகளைக் கொண்டு இந்த விசாரணையை நடத்தவேண்டும். மேலும், துணைக் காவல் கண்காணிப்பாளர் அளவிலான அதிகாரியிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்படவேண்டும் என மனுவில் குறிப்பட்டிருந்தனர்.
இம்மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை ஐஐடி மாணவர்கள் அனைவருக்கும் போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்கவும், மாணவர்களின் மனு தொடர்பாக உரிய பதில் அளிக்க கூடுதல் அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.