அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டன.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான  அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன்.
Updated on
1 min read

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டன.

அதிமுக துணைப் பொதுச் செயலரான டி.டி.வி.தினகரன், லண்டனில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற தனியார் நிறுவன இயக்குநரான அவர், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றியும், அந்நியச் செலாவணிச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தியாவில் இருந்து 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலர் முதலீடு செய்ததாகப் புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக, தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதேபோல ரிசர்வ் வங்கி அனுமதியின்றி லண்டனில் ஹோட்டல் கட்டுவதற்கு முதலீடு செய்ததாக தினகரன் மீது அமலாக்கத்துறை மற்றொரு வழக்கையும் பதிவு செய்தது.
இவ்வழக்குகளின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹோட்டல் கட்டுவதற்கு முதலீடு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே டி.டி.வி. தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
குற்றச்சாட்டு பதிவு: அதன் பின்னர் டி.டி.வி. தினகரன், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டதால், டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய முடியாமல் இருந்தது.
இரு வழக்குகளும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார். இதைத் தொடர்ந்து நீதித்துறை நடுவர் மலர்மதி, டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் வழக்கின் குற்றச்சாட்டுகளை தினகரனிடம் வாசித்துக் காட்டி பதிவு செய்தார்.
அந்த குற்றச்சாட்டுகள் முழுவதையும் மறுப்பதாக தினகரன் தெரிவித்தார். அரசுத் தரப்பு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதித்துறை நடுவர் மலர்மதி உத்தரவிட்டார். இதேபோல மற்றொரு வழக்கின் விசாரணைக்கு அரசுத் தரப்பு சாட்சி ஆஜராகாததால், அந்த வழக்கின் விசாரணையும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என தினகரன் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வழக்கின் விசாரணை, ஏற்கெனவே தாமதமாக நடைபெற்று வருவதால் விசாரணையை தள்ளிவைக்க முடியாது என நீதித்துறை நடுவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com