மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில் என்ஜினில் தீ

மும்பை - நாகர்கோவில் விரைவு ரயிலில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
Updated on
1 min read

மும்பை - நாகர்கோவில் விரைவு ரயிலில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த ரயில் புதன்கிழமை மதியம் 12 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பியது. வியாழக்கிழமை மாலை சுமார் 4 மணிக்கு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனங்கூரைத் தாண்டி வீரபாண்டி பிரிவு அருகே வரும்போது ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை நடுவழியில் நிறுத்தினார். நேரம் ஆக, ஆக கரும்புகை அதிக அளவில் வெளிப்பட்டதால், எஞ்ஜினை ஒட்டி இருந்த பெட்டியில் வந்த பயணிகள் தங்கள் உடமைகளைக் கூட எடுக்காமல் பதறியடித்தபடி ரயிலை விட்டு இறங்கினர்.
சிறிது நேரத்தில் புகை வெளியேறுவது நின்றுவிட்டதால், பதற்றம் தணிந்த ரயில் ஓட்டுநர் என்ஜினுக்கு அடிப்பகுதியில் சென்று பார்த்துள்ளார். அப்போது, பிரேக் பழுதடைந்ததால் ஏற்பட்ட உராய்வு காரணமாக கரும்புகை வெளியேறியது தெரிய வந்தது.
அதை ஓட்டுநர் சரி செய்தார். என்ஜின் சரிசெய்யப்பட்டதால் பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறிக் கொண்டனர். மீண்டும் அங்கிருந்து மெதுவாக இயக்கப்பட்ட ரயில் ஈரோட்டுக்கு சுமார் அரை மணி நேரம் தாமதமாக மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தது. பழுதடைந்த ரயில் என்ஜினுகுப் பதிலாக மாற்று என்ஜின் கொண்டு வந்து ரயிலில் பொருத்தப்பட்டது. முன்கூட்டியே மாற்று ரயில் என்ஜின் தயார் நிலையில் இருந்ததால் உடனடியாக மாற்றப்பட்டது. மீண்டும், ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு ரயில் கிளம்பிச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com