சகோதரர் மீது மிளகாய் பொடியை தூவி தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல்: தாய்மாமன் மகன் உள்பட 4 பேர் கைது

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த போது, சகோதரர் மீது மிளகாய் பொடியை தூவி ஆசிரியையை கடத்திய அவரது தாய்மாமன் மகன் உள்பட 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
Published on
Updated on
1 min read

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த போது, சகோதரர் மீது மிளகாய் பொடியை தூவி ஆசிரியையை கடத்திய அவரது தாய்மாமன் மகன் உள்பட 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் என்எம்கே காலனியைச் சேர்ந்தவர் துரைராஜ். கட்டட மேஸ்திரி. இவரது மகள் தனலட்சுமி (24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு செப்டம்பர் 4-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர், தினமும் தனது சகோதரர் முத்துக்குமாருடன் (28) இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் செல்வது வழக்கமாம். அதே போல, வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து கிளம்பிய இருவரும், குட்ஷெட் பாலம் அருகே வந்த போது, அந்த வழியாக கார் மற்றும் பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, முத்துக்குமார் மீது மிளகாய் பொடியை தூவி கீழே தள்ளிவிட்டது. இதையடுத்து, பின்புறம் அமர்ந்திருந்த தனலட்சுமியை காரில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து முத்துக்குமார் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கார் நம்பர், அப்பகுதி மற்றும் வழிநெடுகிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் கண்காணித்ததில் கார் குடவாசல் வட்டம் கொரடாச்சேரியை நோக்கி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி போலீஸார், அப்பகுதி போலீஸாருக்குத் தகவல் அளித்து, காரை தடுத்து நிறுத்தினர். அப்போது காரிலிருந்த ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் தப்பியோடினர். மீதமிருந்த 4 பேரையும் போலீஸார் பிடித்து, தனலட்சுமியை மீட்டனர்.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்களில் ஒருவர், தனலட்சுமியின் தாய்மாமன் கண்ணையன் மகனும், கட்டடத் தொழிலாளியுமான கஜேந்திரன் (30) என்பதும், இவர் தனலட்சுமியை பெண் கேட்டும் பெற்றோர் தர மறுத்த ஆத்திரத்தில், நண்பர்களான கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (29), நசீர்முகம்மது (30), திருச்சியைச் சேர்ந்த துவாரகன் (20) உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து, தனலட்சுமியை காரில் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து கண்டோன்மென்ட் போலீஸார், கஜேந்திரன், அரவிந்த், நசீர்முகம்மது, துவாரகன் ஆகிய 4 பேரையும் கைது செய்ததுடன், தனலட்சுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com