

குடிநீர் -வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து கோவை, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட ஏழு மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது, வேளாண்மை உள்பட பல முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
இடுபொருள் மானியம் வழங்காமல் விடுபட்டுப் போன விவசாயிகளுக்கு அதனை உடனடியாக வழங்கவும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கவும் இந்த ஆய்வின் போது ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த அவர் அறிவுறுத்தினார்.
குடிநீர் வழங்குதல்: பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் எனவும், குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்தி, ஏரி, குளங்களை வரும் மழைக்காலத்துக்குள் அவற்றின் கொள்ளளவை அதிகப்படுத்தி நீரை தேக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
தமிழக அரசின் உத்தரவுப்படி ஏரி, குளம், கால்வாய்களை உடனடியாக தூர் வாரி, விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்தி, தங்குதடையின்றி வண்டல் மண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
சேலம், கோவை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் ஆகியன தூர்வாரப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.