அதிமுக பொதுச் செயலர் சசிகலா மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு மீதான விசாரணையை ஜூன் 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.ஜெ. டிவிக்கு அப்லிங்க் கருவிகளை வாடகைக்கு வாங்கியதில் அந்நியச் செலாவணி சட்ட விதிகளை மீறியதாக அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா, அவருடைய அக்காள் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை கடந்த 1996 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இந்த வழக்கின் விசாரணையை விடியோ கான்ஃபரன்சிங் மூலம் தன்னிடம் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், கேள்விகளை எந்த மொழியில் கேட்க வேண்டும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதித் துறை நடுவர் ஜாகீர் உசேன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள், சசிகலாவின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர். கேள்விகளைத் தமிழில் கேட்க வேண்டும் என அதில் சசிகலா குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள், அமலாக்கத் துறை இந்த வழக்கு விசாரணையின்போது கேட்கும் கேள்விகளை முன்கூட்டியே தங்களுக்கு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். அதற்கு அமலாக்கத் துறை வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் அவர், அதற்கு பதில் மனு தாக்கல் செய்வதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டார்.
இதைக் கேட்ட நீதித் துறை நடுவர் ஜாகீர் உசேன், இவ்வழக்கின் விசாரணையை ஜூன் 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.