அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் இரா.தாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, எங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம, நகர்ப்புறங்களில் மோட்டார் சைக்கிளில் பேரணியாகச் சென்று பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.
அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை தயார் செய்து வழங்க உள்ளோம். இந்தப் பேரணி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து விரைவில் தொடங்கவுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளி, புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஒதுக்கீடு செய்து வெள்ளிக்கிழமை (மே 19) முதல் நடைபெறும் கலந்தாய்வில் நிரப்பிட வேண்டும். ஆசிரியர்களை கற்பித்தல் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் அ.நடராஜன், பொருளாளர் பி.சரவணன் உள்ளிட்டோர் ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.