மானியக் கோரிக்கை விவாதங்களுக்குத் தயாராகும் அரசு: துறைச் செயலாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்த முடிவு

சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு தமிழக அரசு தயாராகி வருகிறது.
Updated on
1 min read

சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு தமிழக அரசு தயாராகி வருகிறது.
இதற்காக 36-க்கும் மேற்பட்ட துறைகளின் செயலாளர்களுடன் வரும் வாரத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதற்கு பேரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சுமார் 6 மாத காலங்களுக்கு அரசுத் துறைகளின் செலவினங்களுக்குத் தேவையான நிதியைப் பெறவும் பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மானியக் கோரிக்கை விவாதம்: துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்பட உள்ளன. இதற்காக பேரவை கூடும் நாள் ஜூனில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த அறிவிப்புக்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் எதிர்காலத் திட்டங்களை ஆய்வு செய்யவும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக ஒவ்வொரு நாளும் அரசுத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளொன்றுக்கு மூன்று அரசுத் துறைகள் வீதம், அனைத்துத் துறைகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
புதிய திட்டங்களுக்கு யோசனைகள்: துறை ரீதியாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது தமிழகத்தில் புதிதாக செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் விதம், குறிப்பாக மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com