மதுரை சுற்றுச் சாலையில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி விட்டு,இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுரை சுற்றுச்சாலையில் விரகனூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் புதன்கிழமை நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில், இளைஞர் தான் வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை குத்தி விட்டு, தானும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற சிலைமான் போலீஸார் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த மாடசாமி மகள் ராஜி (22) என்பதும், அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சைமன் (23) என்பதும் தெரியவந்தது.
ஒரு தலைக் காதலால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இருவரது பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் வந்த பிறகே சம்பவத்துக்கான காரணம் தெரியவரும் என, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.