திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அதிகளவில் பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி பத்து நாள்கள் நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு சுவாமி ஜெயந்திநாதர் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்கிறார். தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இவ் விழாவின் நிறைவு நாளான ஜூன் 7ஆம் தேதி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.
மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து மகா தீபாராதனை ஆகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்து திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவை முன்னிட்டு கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விரதமிருந்தும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஜூன் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மற்றும் ஜூன் 8ஆம் தேதி வியாழக்கிழமையன்றும் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.