முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பது சுயமாக எடுத்த முடிவு என்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏ ஜக்கையன் கூறினார்.
புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த தினகரன் அணி எம்எல்ஏ ஜக்கையன், திடீரென எடப்பாடி கே.பழனிசாமிக்கு வியாழக்கிழமை ஆதரவு தெரிவித்தார். தினகரன் முடிவு திமுகவுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்று ம் அவர் கூறினார்.
கம்பம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன் வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அவர் பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
உட்கட்சி பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என தினகரனிடம் நான் கூறினேன். ஆனால், தினகரனின் நடவடிக்கை தி.மு.க.வுக்கு சாதகமாக மாறியதால் விலகி வந்தேன். முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என விரும்புகிறேன்.
அதிமுகவை 33 ஆண்டுகளுக்கு பின்பு தொடர்ந்து ஆளுங்கட்சியாகவும், இந்தியாவிலேயே மூன்றாவது மிகப் பெரிய அரசியல் சக்தியாகவும் ஜெயலலிதா மாற்றிக் காட்டினார். அதிமுக ஆட்சி நூறாண்டுகள் தொடர வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினார். அந்த விருப்பத்திற்கேற்ப அதிமுக ஆட்சி தொடர வேண்டும்.
இப்போது நடப்பது உட்கட்சி பிரச்னை. அதிமுகவின் குடும்ப சண்டையை திமுக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை முடிவுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். தினகரன் அணியில் இருந்து வெளியேறி வந்தது நான் சுயமாக எடுத்த முடிவு. என்னுடைய முடிவை மற்ற நண்பர்களும் மேற்கொள்வார்கள் என்று கருதுகிறேன்.
இதற்கிடையே, பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து, அவர் அளித்த நோட்டீஸுக்கு பதிலளித்ததாக ஜக்கையன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.