மதுரை மாவட்டம் பேரையூர் அருகே புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட 7 -ஆம் வகுப்பு மாணவருக்கு போலீஸார் மனநல சிகிச்சை அளித்து மீட்டனர்.
புளூவேல் இணையதள விளையாட்டில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஊரக காவல்துறை சார்பில் புளூவேல் விளையாட்டு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புளூவேல் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களை மீட்டு மன நல ஆலோசனை வழங்க சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 7 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கையில் திமிங்கலம் படம் வரையப்பட்டு இருந்தது. இதை கவனித்த சக மாணவர்கள் இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் புளுவேல் விளையாட்டில் மாணவர் ஈடுபட்டு வருவது தெரிந்தது.
இதுதொடர்பான தகவலின்பேரில், சேடபட்டி துணைக் கண்காணிப்பாளர் சார்லஸ் தலைமையிலான போலீஸார், பள்ளிக்குச் சென்று மாணவரிடம் விசாரித்தனர். இதில் மாணவரின் பெற்றோர் வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருவதால் மாணவர் பாட்டி வீட்டில் தங்கிப்படித்து வருவதும், உறவினர் மூலம் அவர் புளுவேல் விளையாட்டை விளையாடி வருவதும் தெரிந்தது.
இதனால் கையில் திமிங்கலம் படத்தை வரைந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாணவருக்கு மன நல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கிய போலீஸார், புளுவேல் விளையாட்டில் உள்ள அபாயங்களை எடுத்துக்கூறினர்.
இதையடுத்து புளுவேல் விளையாட்டில் இருந்து வெளியேறுவதாக மாணவர் உறுதி அளித்தார். அதன் பின்னர் மாணவரின் குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்கிய போலீஸார் மாணவரை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.