இந்தியாவை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது பாஜக அரசு என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் திருமயம் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், அரசு உள்ளதா நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. உடனடியாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று மக்கள் நலன் காக்கும் அரசு பதவியேற்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின் தேர்தல் வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கருப்புப் பணம் கைப்பற்றப்படும்; கல்வி, தொழிற்கடன் வழங்கப்படும்; ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவேன் என்றார். மாறாக வேலை இழப்புகள் தான் ஏற்பட்டுள்ளன. பணமதிப்பு நீக்கத்துக்குப் பின்னர் இந்தியா முழுவதும் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். நெல், கரும்புக்கு நியாயவிலை தந்தாரா? சமையல் கேஸ், பெட்ரோல், பஸ், ரயில் கட்டணம் குறைந்துள்ளதா? சமையல் கேஸ் மானியத்தை ஒழிப்பேன் என்கிறார். இந்த அரசு ஏழை, எளிய மக்களுக்கு விரோதமான அரசாகும். பாஜக ஆட்சியில் சிறுபான்மை, தலித் மக்கள் மற்றும் பெண்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். புதிய அரசு அமைய வேண்டும். அது நலிந்த, சிறுபான்மை, தலித் மக்களுக்கு ஆதரவான அரசாக அமைய வேண்டும். அதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.
கூட்டத்துக்கு பொன்னமராவதி வட்டாரத் தலைவர் கே.செல்வராஜன் தலைமைவகித்தார். திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.சுப்புராம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் தர்ம. தங்கவேல், காரைக்குடி எம்எல்ஏ கேஆர்.ராமசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சி.புஷ்பராஜ், என்.சுந்தரம், காரையூர் வட்டாரத் தலைவர் வி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரத் தலைவர் எஸ்.பழனியப்பன் நன்றி கூறினார்.