மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை கடல்சீற்றம் அதிகமாக இருந்தது. 11 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.
செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர், கோவளம், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு சுமாரான மழை பெய்தது.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை காலை முதலே 11 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன.
கடல் அலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்ததால் சிலர் வீடுகளுக்குள் இருக்க அஞ்சி வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றனர். சிலர் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.
மாமல்லபுரம், உய்யாளிகுப்பம், தேவனேரி, கொக்கிலிமேடு, வெண்புருஷம் குப்பம், சூளேரி காட்டுக்குப்பம், புதுகல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கோவளம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் 15-வது நாளாக வெள்ளிக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மழைகாரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.