திமுகவை அழிக்க திட்டமிட்டு திணிக்கப்பட்ட 2ஜி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,
வரலாற்று சிறப்புமிக்கதொரு தீர்ப்பு இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு போடப்பட்டது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடபட்ட வழக்குதான் இந்த 2ஜி வழக்கு. அந்தவகையில், இதை பெரிய அளவில் சித்தரித்து, பொய் கணக்குகளை எல்லாம் காட்டி இந்த வழக்கை திணித்தார்கள்.
அப்படிப்பட்ட இந்த வழக்கிலிருந்து, அனைவருமே குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு தில்லியில் உள்ள தனி நீதிமன்றம் மூலம் கிடைத்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய ஒன்று. எனவே, திமுகவை பொறுத்தவரையில் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதை தனி நீதிமன்றம் தெளிவாக தங்களது தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கும் இந்தநேரத்தில், ஊடகத்துறையை சேர்ந்த உங்களை நான் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த வழக்கு போடப்பட்ட போது, இதை எந்தளவுக்கு மக்களிடையே பெரிதுபடுத்தி, கழகத்தின் மீது எவ்வளவு பெரிய களங்கத்தை சுமத்த வேண்டும் என்று எவ்வளவு ஆர்வத்தோடு இதில் கவனம் செலுத்தினீர்களோ, இப்போது திமுக எந்தவித குற்றமும் செய்யவில்லை என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பையும் மக்களிடத்தில் நீங்கள் ஆர்வத்தோடு எடுத்துச் சொல்ல வேண்டும், உங்களுக்கு உள்ள அந்தக் கடமையை நீங்கள் ஆற்றிட வேண்டும் என்று திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.