சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றது தொடர்பாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டு தொடர்ந்து 2வது நாளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் இன்று நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், வழக்கு விசாரணை, அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவுக்கு ஜேக் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால், விசாரணைக் குழுவை திரும்பப் பெறுவதாக துணை வேந்தர் செல்துரை அறிவித்துள்ளார்.