கோவை: கோவையில் சர்ச்சைக்குரிய வகையில் தனியார் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சுகப் பிரசவ முகாம்' திடீர் என்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் அனடாமிக் தெரபி என்ற தனியார் அமைப்பின் சார்பாக 'இனிய சுகப் பிரசவம்' என்னும் பெயரில் ஒரு நாள் மருத்துவ முகாம் ஒன்று வரும் 26-ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு புதன்கிழமையன்று வெளியானது. இது தொடர்பான அறிவிப்பானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது.
அந்தஅறிவிப்பில் 'மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், இரத்தப் பரிசோதனை என எதுவும் எடுக்காமல், மருத்துவரிடமும் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வதே சுகப் பிரசவம் ஆகும். இதுவே சிறந்த வழிமுறை ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இது தவறான விஷயம் என்றும் கர்ப்பிணிப் பெண்களின் உயிருடன் விளையாடும் ஆபத்தான விஷயம் என்றும் சர்ச்சைகள் எழுந்தன. பலரும் இது தொடர்பாக கண்டனக் குரல்களை எழுப்பினர். இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இதனைத் தடை செய்ய வேண்டும் என்று வலியிறுதியிருந்தன.
சமீபத்தில் திருப்பூர் அருகே பிரசவ வலி எடுத்த நிறைமாத கர்ப்பிணியான மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், யூ ட்யூப் உதவியுடன் பிரசவம் பார்க்க முயன்ற கணவனின் செயலால், அதிக ரத்தப்போக்கினால் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் அனைவரையும் கோபத்தின் உச்சிகேக் கொண்டு சென்று விட்டது எனலாம்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்த 'சுகப் பிரசவ முகாம்' திடீர் என்று ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.