சென்னை: தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் உடல்நிலையின் ஒரு பகுதியாக, திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அரைமணி நேரம் உட்கார வைக்கப்பட்டார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த வாரம் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ராக்கியாஸ்டமி குழாய் மாற்றப்பட்ட பொழுது காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று வந்து அவதிப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக ரத்த அழுத்தக் குறைபாடு ஏற்பட்டதன காரணமாக கடந்த 27-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று முதல் அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அவரது உடல்நிலை சீராகி வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகின. அத்துடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மருத்துவமனையில் கருணாநிதியினை சந்தித்த புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் உடல்நிலையின் ஒரு பகுதியாக, திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அரைமணி நேரம் உட்கார வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
அளிக்கப்படும் தொடர் சிகிச்சைகளின் பலனாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நிலையானது கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட பின்னடைவில் இருந்து நல்ல அளவில் முன்னேறியுள்ளது. அத்துடன் கட்டிலில் படுத்தே இருப்பதன் காரணமாக அவருக்கு படுக்கைப் புண் மற்றும் முதுமையின் காரணமாக எழும் பிரச்னைகள் உண்டாகாமல் தடுக்க கட்டிலில் நிமிர்த்தி உட்கார வைக்கப்பட்டார். அதை அடுத்து தொடரும் பொருட்டு சிகிச்சையின் ஒரு பகுதியாக திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அரைமணி நேரம் தொடர்ந்து உட்கார வைக்கப்பட்டார். இதன் காரணமாக அவரது முன்னேற்றம் சீராக இருக்கும்.
இவ்வாறு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.