சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மே மாதம் பல கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எனவே, தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் கூட்டுறவு சங்க தேர்தலுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தவும், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தும், தேர்தல் தொடர்பான வழக்குகளை ஜூன் மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சியை மையமாகக் கொண்டு 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர்கள், இணைப் பதிவாளர்கள் அடங்கிய குழுக்களை ஒரு வார காலத்துக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி, கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற 4 உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தமிழகம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மேற்கு மண்டலத்திற்கு நீதிபதி ராஜேஸ்வரனும், தெற்கு மண்டலத்திற்கு நீதிபதி ராமநாதனும், வடக்கு மண்டலத்திற்கு நீதிபதி வெங்கட்ராமனும் மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு என நீதிபதி ராஜசூர்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளையும் வெளியிடலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.