பல்வேறு நோய்களுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உணவுக் குழாய்-வயிறு-உடல் பருமன் இந்தியா அமைப்பின் சார்பில் நினைத்ததும் இருந்ததும்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாப்பூர் செயின்ட் இசபெல் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதே தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சந்திரமோகன் மற்றும் கனகவேல், நரம்பியல் நிபுணர் திலோத்தமா, பொது மருத்துவத் துறை நிபுணர் வி.நம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பேசியது: பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை வைத்து, இன்ன பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது என்று அவர்களே முடிவுக்கு வந்து விடுகிறார்கள். மேல் வயிற்றில் வலி இருந்தால் வயிற்றுப் புண், மலத்தில் ரத்தம் வெளியேறினால் மூலம், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் உணவில் அமிலத்தன்மை (அசிடிட்டி) என்று நினைத்து, அவர்களே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி உட்கொள்கின்றனர், அல்லது அதே அறிகுறிகளுக்காக நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான செயல்.
ஒரே மாதிரியான அறிகுறிகள் பல நோய்களுக்கு ஏற்படலாம். மலத்தில் ரத்தம் வெளியேறினால் அது மலக்குடல் புற்றுநோயாகவும் இருக்கலாம். மேல் வயிற்றில் வலி இருந்தால் இரைப்பை புற்றுநோயாகவும் இருக்கலாம்.
எனவே, அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, பெரிய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சாந்தோமிலுள்ள காது கேளாதோர் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்களும் இதில் பங்கேற்றனர். அந்த மாணவர்கள் சைகை மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர்.