நடிகர் சங்க பொதுக் குழு சென்னையில் இன்று கூடுகிறது
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் நடிகர் சங்கத்தின் 65 -ஆவது பொதுக் குழுவாகும்.
கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார்.
தேர்தல் குறித்து முடிவு: தற்போது நிர்வாகப் பதவியை வகித்து வரும் நாசர் தலைமையிலான நிர்வாக குழுவின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இனி வரும் 2018 - 21 ஆம் ஆண்டுக்கான தேர்தலை நடத்துவது குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. நாசர் தலைமையிலான நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பான, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்போது உள்ள நிர்வாகமே தொடர்ந்தால் நல்லது என்று நாசர் தலைமையிலான நிர்வாகம் விரும்புகிறது. ஆனால் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்தக் கூட்டத்தில் இதுகுறித்து பெரும் விவாதங்கள் எழும் என்று சொல்லப்படுகிறது.
அடையாள அட்டை இருந்தால் மட்டுமே: நடிகர் சங்கப் பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு சங்கத்தின் அடையாள அட்டை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கப் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும்விதமாக, சென்னையில் நடைபெறும் படப்பிடிப்புகள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.