சென்னையில் ஹவாலா மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து, ரூ.11 கோடி ரொக்கம், 7 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஒரு கும்பல் ஹவாலா பணம், நகை கைமாற்றுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அந்த ஹோட்டலில் சோதனையிட வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது அங்கு வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் வைத்திருந்த பையை அதிகாரிகள் சோதனையிட்டனர். இச் சோதனையில் அந்த பையில் இருந்த 6 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த ஹோட்டலில் ஒரு அறையில், தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கொரிய நாட்டைச் சேர்ந்த இரு நபர்கள் தங்கியிருப்பதும், அவர்கள் ஹாங்காங்கில் இருந்து தங்கத்தை விமானம் மூலம் கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள், அந்த அறைக்குச் சென்று கொரிய நாட்டைச் சேர்ந்த இரு நபர்களையும் கைது செய்தனர். 5 பேர் கைது: இதன் தொடர்ச்சியாக, அந்த தொழிலதிபரின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில், அங்கிருந்து 1 கிலோ கடத்தல் தங்கம், ரூ.6 கோடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த தொழிலதிபரின் இரு உதவியாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் முடிவில், தங்க கடத்தலுக்குப் பயன்படுத்திய ஒரு காரை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது தொடர்பாக வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொரிய நாட்டைச் சேர்ந்த இரு நபர்கள், தொழிலதிபர் உள்பட மொத்தம் 5 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.11.16 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.2.20 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.