கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு சரியாக ஆய்வு செய்யவில்லை என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு இன்னும் நிவாரண உதவி முழுமையாக வழங்கப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு சரியாக பார்வையிடவில்லை.
புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப பல ஆண்டுகள்வரை ஆகும் நிலை உள்ளது. மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட எந்தப் பிரச்னையையும் தமிழக அரசு முறையாக கையாளவில்லை. தமிழர்களையும், தமிழகத்தையும் அரசு வஞ்சித்து வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடி இருக்கும்போது காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தினால் உண்மை எப்படி தெரியும்? இந்த ஆலை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்றார் அவர்.