சென்னை: உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத்த தொடர்ந்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.
தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள் என டி.டி.வி. தினகரன் தரப்பில் கூறப்பட்டது.
அதேசமயம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா கடந்த ஞாயிறு அன்று பதவியேற்றுக் கொண்டார். பின்னர் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்களா என விளக்கம் கேட்டு, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹுவுக்குகடிதம் எழுதினார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.