பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி விரைவில் மாநிலக் கட்சி அந்தஸ்துக்கு வந்துவிடும் என்றார் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் மாவட்டம், கடவூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தது:
கஜா புயலுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணத் தொகையான ரூ.350 கோடி போதாது. எனவே முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் முதலில் கோரிய ரூ.15,000 கோடி தொகையைத் தர வேண்டும் என்று மக்களவையில் குரல் கொடுப்போம்.
விரைவில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் மேக்கேதாட்டு அணைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில்கூட சுணக்கம் காட்டுகிறது. தமிழகத்தில் தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மேலோங்கியுள்ளதால் தேசியக்கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லை. எனவேதான் தமிழகத்தை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். ஒவ்வொரு மாநில மொழியையும், கலாசாரத்தையும் மதித்து மத்திய அரசு நடக்க வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உதவி செய்கிறார்கள். அதிகம் நிதி தருகிறார்கள். இது வருந்தத்தக்கது.அரசியல் காரணங்களுக்காகத் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.
தேசியக் கட்சிகள் அரசியல் விருப்பு வெறுப்புகளைக் காண்பிப்பதால் மாநில உணர்வுள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன. காங்கிரஸ் இப்போது 2 மாநிலங்களில்தான் ஆட்சி செய்கிறது. அது மாநிலக் கட்சியாக மாறும். அதுபோல பாஜகவும் காலப்போக்கில் மாநிலக் கட்சியாக மாறிவிடும் என்றார்.