கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த மோளப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்திருந்த கூண்டில் புதன்கிழமை சிக்கியது.
மோளப்பாளையம் பகுதியில் அச்சுறுத்திய சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்தனர். மோளப்பாளையம் வனப் பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் கூண்டை வைத்திருந்தனர். இந்தக் கூண்டில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை சிக்கியது. பிடிபட்ட ஆண் சிறுத்தைக்கு 6 வயது இருக்கும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சரகம் தெங்குமரஹாடா வனப் பகுதியில் விடுவதற்கு பலத்த பாதுகாப்புடன் வனத் துறையினர் பிரத்யேக கூண்டில் சிறுத்தையைக் கொண்டு வந்தனர். பவானிசாகரை அடுத்த கல்லாம்பாளையம் வனப் பகுதியில் சிறுத்தை விடப்பட்டது.