மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அண்ணாசாலையில் அண்ணாசிலை அருகே பிற்பகலில் அமைதிப் பேரணி தொடங்கியது. திறந்த வேனில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தமிழன், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தங்கதமிழ்செல்வன், பி.வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அனைவரும் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை அடைந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
உறுதிமொழிகள்: அதிமுக நீர்த்துக் போய்க் கொண்டிருக்கும் கொடுமையைத் தடுத்து நிறுத்தி மாபெரும் தலைவர்கள் நிர்மாணித்த கட்சியை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும்.
மிக விரைவில் நீதியின் தீர்ப்பைப் பெற்று இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்போம். 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தனியாக நடந்தாலும் அல்லது நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடந்தாலும், தேர்தல் களம் அனைத்திலும் டிடிவி தினகரன் தலைமையில் மாபெரும் வெற்றியை பெற்றுக் காட்டுவோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி சூடிட அர்ப்பணிப்போடு உழைப்போம் என அமமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அண்ணா திராவிடர் கழகம்-தீபா: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் மெரீனாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார். அதிமுக, அமமுக சார்பில் பேரணிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே, தனது கணவர் மாதவனுடன் ஜெயலலிதா நினைவிடம் வந்த அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று, அண்ணா திராவிடர் கழகத்தின் நிறுவனரும், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.