நெல் ஜெயராமனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்திகேட்டு ஆற்றொனா துயரம் கொள்கிறேன்.
பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பொருட்டு தனது வாழ்வை அர்ப்பணித்து 150க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்த ஒரு சாதனையாளர் என்றே அவரை சொல்லலாம். நோயின் தாக்கம், கடுமையாக அவரை பாதித்தபோதும், தனது லட்சியத்தை விட்டுவிடாமல் அதற்காக உழைத்திட்ட தூயவர் நெல் ஜெயராமன்.
லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உற்பத்தியை பெருக்கி அதனை சந்தைப்படுத்தியதன் மூலமாக உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் ஜெயராமன்.
இயற்கை விவசாயத்தையும், வேளாண்மையையும், பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு சமூக விழிப்புணர்வாக உருப்பெற்றுவரும் இச்சூழலில், நெல் ஜெயராமனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.