வைகோ பற்றி வன்னிஅரசு கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல: திருமாவளவன்

வைகோ பற்றி வன்னிஅரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல என திருமாவளவன் தெரிவித்தார். 



சென்னை: வைகோ பற்றி வன்னிஅரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல என திருமாவளவன் தெரிவித்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனியார் தொலைகாட்சியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகோவிடம், தொலைகாட்சி நெறியாளர், தலித்துகளுக்கு திராவிட அரசியலில் சரியான அதிகாரப்பகிர்வு கிடைத்துள்ளதா என்ற கேள்வியை முன் வைத்தபோது, அதற்கு எங்கள் வீட்டிலும் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள், அவர்களோடு நான் சரிசமமாக பழகுகிறேன் என்று பதில் சொன்ன வைகோ, மைகை கழற்றி வீசிவிட்டு கோபமாக வெளியேறினார். 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னிஅரசு வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த இரு நாள்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்கக்கூடிய தலைவர் அவர். அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்தத் தலைவர் வைகோதான். தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன். வன்னி அரசு கண்டனம் திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வைகோ அதற்குப் பதில் அளிக்காமல், "தலித்துகளுக்கு எதிராக என்னைக் காட்ட முயற்சி செய்கிறீர்களா? எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள்தான்" என்று சொல்கிறார். 

இந்த உளவியலை ஓர் ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை? எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்' இருக்கிறதா? 

இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா? என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள். அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன - சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்! என அவர் தெரிவித்திருந்தார். 

இதனிடையே, மதிமுக நிர்வாகிகளிடம் பேசிய வைகோ, திருமாவளவனுக்கு தேர்தல் செலவுக்காக ரூ.30 லட்சம் கொடுத்தேன். என்னைப் பார்த்து இப்படி பேசியது வருத்தமளிக்கிறது. தூங்கவில்லை என்றெல்லாம் வைகோ பேசினார். 
 

இந்நிலையில்,  அண்ணல் அம்பேத்கரின் 62ஆம் நினைவுநாளையொட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மலர்தூவி திருமாவளவன் மரியாதை செலுத்தினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வைகோ பற்றி வன்னிஅரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல. 

வன்னிஅரசு சர்ச்சைக்குள்ளான பதிவை நீக்கிவிட்டார், தனது வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டார் என்றும் வைகோவின் கோபம் என்மீதா, இல்லை வன்னி அரசு மீதா? எதிர்ப்பை நேரடியாக பதிவு செய்வதை தவிர நான் யாரையும் தூண்டிவிடுவதில்லை என கூறினார் திருமாவளவன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com