பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி குற்றச்சாட்டுப்பதிவு செய்யப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டுப் பதிவை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவை புதிதாக மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாறன் சகோதரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை மூன்று மாதம் கடந்துவிட்டது.
எனவே புதிதாக குற்றச்சாட்டுப் பதிவுசெய்ய எதிர்மனுதாரர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.