அந்நியச் செலாவணி வழக்கு: சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் மறு குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் 13-ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அந்நியச் செலாவணி மோசடி வழக்கின் மறு குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் 13-ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கப் பிரிவினர் ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக நான்கு வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில், கடந்த 2017 ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலிக் காட்சி வழியாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக நவம்பர் 30-ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர் மதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சசிகலாவை ஆஜர்படுத்தவில்லையென பெங்களூரு சிறை நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம், சசிகலாவை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com