ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன்ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளில் இப்போதே பிளாஸ்டிக்குகளைத் தடை செய்யவும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் சேகர் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:-
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை படத்துடன் விளக்கும் பதாகைகள் தொழிற்சாலைகளின் நுழைவாயில்களில் நிரந்தரமான அறிவிப்புப் பலகையாக பார்வையாளர்களுக்கு நன்கு தெரியும்படி வைக்க வேண்டும். இந்த பலகையானது பிளாஸ்டிக்கைக் கொண்டு அமைக்கப்படாமல் எஃகு போன்ற இரும்புப் பொருள்களைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
ஆலைகளின் வாயில்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பகுதியாக அறிவித்து, பிரதான இடங்களில் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் குறித்த விழிப்புணர்வை தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும், ஆலையில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விழிப்புணர்வு மூலமாக ஏற்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக உள்ள பொருள்கள் பற்றியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் குழுக்களின் சேவைகளையும் தொழிற்சாலைகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கலைப் போட்டிகள்: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளிடையே கலைப் போட்டிகளை நடத்தலாம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த மாட்டோம் என்பதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
தொழிற்சாலைக்கு வரும் விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோரிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் குறித்தும், அவற்றுக்குப் பதிலாக மாற்றாக பயன்படுத்தப்படும் பொருள்கள் பற்றியும் துண்டுப் பிரசுரங்களை அளிக்கலாம்.
தொழிற்சாலைகளில் உள்ள உணவகங்கள், அலுவலகங்கள், ஆலோசனை கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தொழிற்சாலையில் உயர், நடுத்தர மற்றும் அதற்குக் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் வழியாக தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஆலையில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்தப் பணிகளை பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ள வேண்டும். அவற்றைச் சிறப்பாகச் செய்யும் தொழிற்சாலைகள் தமிழக அரசின் பசுமை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் தடை குறித்த விஷயங்களை ஆவணங்களாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மின்னஞ்சலுக்கு (க்ஷங்ஹற்ற்ட்ங்ல்ப்ஹள்ற்ண்ஸ்ரீல்ர்ப்ப்ன்ற்ண்ர்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம்) வரும் 15-ஆம் தேதிக்குள்ளாக அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.