காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும், மத்திய நீர்வளத்துறை ஆணையராகவும் ஒரே சமயத்தில் இரு பதவிகளை வகித்த மசூத் உசேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய நீர்வளத்துறை ஆணையரையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் நியமித்து, அவரையே மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதியும் வழங்க வைத்திருப்பது பாஜக அரசும் கர்நாடக அரசும் சேர்ந்து செய்த கூட்டுச் சதியாகும்.
இதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருக்கிறது. அதேசமயம், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்ட மசூத் உசேனை உடனடியாக இரு பதவிகளிலிருந்து நீக்கவும், செய்த குற்றத்துக்கு தண்டனை வழங்கவும் உத்தரவிடக் கோரி மேலும் ஒரு வழக்கை தமிழக அரசு தொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.