காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தனது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகிறார். எனவே அவரது இல்லத்தில் காலை 11.30 மணியளவில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை டிசம்பர் 16-ஆம் தேதி திறந்து வைப்பதற்கான அழைப்பிதழையும் சோனியாவிடம் வழங்குகிறார்.
இதையடுத்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் தில்லியில் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல், இக்கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்றால் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து பேசுவேன். இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்திக்கும்போதும் மேக்கேதாட்டு அணை குறித்து பேசுவேன் என்று தெரிவித்தார்.