தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி பறிமுதல்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில், கணக்கில் வராத ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் மதுபான நிறுவனத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில், கணக்கில் வராத ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்:-
 சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 30-ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சென்னையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வைத்திருந்த 6 கிலோ கடத்தல் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
 அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த ஹோட்டலில் தங்கியிருந்த, தங்கக் கட்டி கடத்தலில் ஈடுபட்ட தென் கொரிய நாட்டைச் சேர்ந்த இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அந்தத் தொழிலதிபரின் உதவியாளர் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.1.16 கோடி ஹவாலா பணம், மேலும் ஒரு கிலோ தங்கக் கட்டி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 40 இடங்களில் சோதனை: கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம் நடத்திய விசாரணையில், தியாகராயநகரில் உள்ள பிரபலமான தனியார் மதுபான நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு, அந்தக் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனமும் வரி ஏய்ப்பு, வரி முறைகேடு உள்ளிட்ட மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தியாகராயநகரில் உள்ள அந்த தனியார் மதுபான நிறுவனத்தின் அலுவலகம், பூந்தமல்லி அருகே உள்ள அந்த நிறுவனத்தின் ஆலை, அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடு உள்பட 40 இடங்களில் வருமானவரித்துறையினர் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வந்தனர்.
 ரூ.55 கோடி பறிமுதல்: இந்தச் சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பெரும்பாலான இடங்களில் நீடித்தது. சோதனையில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கணக்கில் வராத ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் வரி ஏய்ப்பு, வரி முறைகேடு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 இந்தச் சோதனை முடிவடைந்த பின்னரே, சோதனையில் கிடைத்த மொத்த ஆவணங்கள், பணம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிறுவன நிர்வாகிகள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணையும் நடைபெற்று வருவதாகவும், அதோடு அந்த நிறுவனத்தின் சில நிர்வாகிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி பிரமுகர்கள் என்பதால், அந்தக் கட்சிக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com