மத்தியில் பாஜவுக்கு எதிராக வலிமையான கூட்டணி உருவாகும் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச. 9) தில்லி சென்று சோனியா காந்தியைச் சந்திக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை (டிச.10) தில்லியில் நடைபெறும் பல மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்வார். அந்தக் கூட்டத்தில் பாஜவுக்கு எதிராக வலிமையான கூட்டணி உருவாகும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படுவர். கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்புவர் என்றார்.