பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (டிச.10) தொடங்கி வைக்கிறார். இந்த வாகனமானது, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தி வருகிறது.
பிரசார வாகனம்: பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்த பிரசார வாகனம் தயாராக உள்ளது.
இந்த வாகனத்தின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து புறப்படும் விழிப்புணர்வு பிரசார வாகனம், மாநிலத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்கிறது.
ஜனவரி 1-ஆம் தேதிக்குள்ளாக பிரசார வாகனம் அனைத்து இடங்களுக்கும் செல்லவுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் எவை, அவற்றுக்குப் பதிலாக எத்தகைய பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பன குறித்த
அனைத்துத் தகவல்களையும் பிரசார வாகனத்தின் மூலமாக மக்களுக்குத் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.