மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமை என்றார் பாரதி ஆய்வாளர் இளசை மணியன்.
எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் பாரதி தரிசனம் ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது:
மகாகவி பாரதியார் சுதந்திரப் போராட்ட வீரர், தேசியக் கவிஞன். அவரது பன்முகத்தன்மை குறித்து நீண்ட நேரம் பேசினாலும் தீர்ந்து போகாது. தேசிய ஒற்றுமை, பெண்ணுரிமையைப் பற்றி அவர் பல இடங்களில் தனது கருத்துகளை ஆழமாக வலியுறுத்தியுள்ளார். பாரதியார் தீவிரவாத தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவர், அந்த இயக்கத்தில் இணைந்த காலத்தில் வடஇந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை சிலர் அரசியல் மேடைகளாக்கினர். இதுபோன்ற நிகழ்வுகள் சிலரது மனதை கஷ்டப்படுத்தும் என்று, தான் நடத்தி வந்த இந்தியா பத்திரிகையில் பாரதியார் சுட்டிக்காட்டினார். மதங்கள் இருக்கலாம், அதில் பிரிவினைகள்கூட இருக்கலாம்; ஆனால், சச்சரவுகள் இருக்கக் கூடாது என்றார்.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என யாராக இருந்தாலும் இந்நாட்டில் பிறந்தவர்கள் என்ற தேசிய உணர்வு தேவை என்றார். பிற மதங்களில் உள்ள நற்பண்புகளைக் கேட்டறிந்து செயல்படுவதில் எவ்வித தவறுமில்லை என்றார். சமய நல்லிணக்கம், சமயசார்பற்ற தன்மையை முன்னிறுத்தி பல கட்டுரைகளையும், கவிதைகளையும் படைத் துள்ளார் பாரதி. அதன்மூலம் தேசிய ஒற்றுமையை பெரிது என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். உன்னுள் நீ கடவுளைப் பார் என்று கூறியதோடு, எல்லா மதங்களும் சமமானவை, உண்மையானவை என்பதே எனது கண்ணோட்டம் என்பதை தமது படைப்புகளால் பாரதியார் வெளிப்படுத்தினார். பாரதியாரின் சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவிலேயே கவிஞனுக்கு என முதல் மணிமண்டபம் பாரதியாருக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது. இங்கு 57 ஆண்டுகளாக கலை இலக்கிய பெருமன்றத்தின் கிளையான பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் கல்கி எடுத்த முயற்சியின் தொடர்ச்சியாக அதே மணிமண்டபத்தில் தினமணியின் சார்பில் மகாகவி பாரதியார் விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.