கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற திரைப்படத்துக்கு தடை கோரும் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தயாரிப்பாளர் சங்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற பெயரில் படத் தலைப்பு பதிவு செய்து வைத்திருந்தேன். இந்தப் படத்தின் கதை மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக கொண்டு, அவர் வெளிநாட்டுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்து சாதனை படைப்பது போல இருக்கும்.
இந்நிலையில், வேலு பிலிம்ஸ் ஐசரி கணேஷ் என்னை அணுகி இப்படத்தின் தலைப்பு தனக்கு வேண்டும் எனவும், இதற்காக ரூ. 1.5 லட்சம் முன் பணமாகவும், மீதி பணத்தை பின்னர் தருவதாகவும் கூறினார். இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். இந்நிலையில், தற்போது இப்படத்தின் (அனிமேஷன் படம்) தயாரிப்பு முடிந்து, படம் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது, அலங்காநல்லூரில் இருந்து 6 இளைஞர்கள் சென்னை வந்து, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்டம் நடத்துவது போல அமைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இது எனது கதைக்கு எதிரானது. எனது கதை முழுக்க எம்.ஜி.ஆர். அவர்களின் கனவு தொடர்பானது. ஆனால் இந்தப் படம், எனது கதைக்கு எதிராக அமைந்துள்ளதால் இப்படத்துக்கு தணிக்கைக் குழு சான்று அளிக்க தடை விதிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இதுகுறித்து மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தீர்வு காண உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.